போர்டிக்சன் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Port Dickson; ஆங்கிலம்: Port Dickson District; சீனம்: 波德申縣) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். போர்டிக்சன் மாவட்டத்தின் முக்கிய நகரம் போர்டிக்சன்(Port Dickson) நகரம்.
போர்டிக்சன் ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாக, மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இடமாகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. உள்ளூர் மக்களால் பி.டி. (PD) என்று சுருக்கமாக அழைக்கப் படுகிறது.[2]
கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகள் மூலமாக எளிதில் அடையக் கூடியதாக இடத்தில் அமைந்து உள்ளது. 10 மைல் நீளத்திற்கு அமைதியான கடற்கரைகள் நீண்டுள்ளன. நெகிரி செம்பிலானில் ஒரே கடற்கரை மாவட்டம்.
வரலாறு
மீனவர்கள் வசிக்கும் ஒரு சிறிய மலாய்க் கிராமமாகப் போர்டிக்சன், தன் வரலாற்றைத் தொடங்கியது. உள்ளூர் மலாய்க்காரர்கள் தஞ்சோங் என்று அழைத்தார்கள். எனினும் அங்கு வாழ்ந்த சீனர்களும், இந்தியர்களும் ஆராங் (Arang) என்று அழைத்தனர். அந்தப் பெயர் ஓர் உள்ளூர் நிலக்கரி சுரங்கத்தின் பெயராகும்.
1820-களில், போர்டிக்சன் நகரில் இருந்து 7 கி.மீ. வடக்கே உள்ள லுக்குட் எனும் நகரில் ஈயப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[3] அதுவே சீனர்களின் வருகைக்கு வழிவகுத்தது. 1840-ஆம் ஆண்டுகளில் போர்டிக்சன் பகுதியில் காபி, மிளகுத் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.
பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில், சர் பிரடெரிக் டிக்சன் (Sir Frederic Dickson) எனும் பிரித்தானிய அதிகாரி, ஈயம் கொண்டு செல்வதற்கான துறைமுகமாகப் போர்டிக்சனை மாற்றி அமைத்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் போர்டிக்சன் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[7]