குவாந்தான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuantan; ஆங்கிலம்: Kuantan City Council); (சுருக்கம்: MBK) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில்; குவாந்தான் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின்பகாங் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.
குவாந்தான் மாநகராட்சியின் அதிகார வரம்பு 324 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாநகராட்சி, குவாந்தான் மாநகரில உள்ள கோலா குவாந்தான் (Kuala Kuantan), உலு குவாந்தான் (Ulu Kuantan), பெசேரா (Beserah) மற்றும் சுங்கை காராங் (Sungai Karang) ஆகிய நான்கு முக்கிம்களை நிர்வகிக்கிறது.
1955-ஆம் ஆண்டில், பகாங் மாநில அரசாங்கம், தன் நிர்வாக மையத்தை கோலா லிப்பிஸ்(Kuala Lipis) நகரில் இருந்து குவாந்தான் நகருக்கு மாற்றியது.
வரலாறு
வளர்ச்சிப் படிகள்
குவாந்தான் பொதுத் தூய்மைக் கழகம் (மலாய்: Lembaga Kesihatan Kuantan; ஆங்கிலம்: Kuantan Sanitary Board); 1913 முதல் 1937 வரை;
குவாந்தான் நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Board); 1937 முதல் 1953 வரை;
குவாந்தான் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Council); 1953 முதல் 31 ஆகஸ்ட் 1979 வரை;
குவாந்தான் நகராட்சி (மலாய்: Majlis Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Council); 1 செப்டம்பர் 1979 முதல் 20 பிப்ரவரி 2021 வரை;
குவாந்தான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuantan; ஆங்கிலம்: Kuantan City Council); 20 பிப்ரவரி 2021 தொடக்கம்;
2021 பிப்ரவரி 21-ஆம் தேதி பகாங் சுலதான் அல்-சுல்தான் அப்துல்லா அல்-ஹாஜ் (Al-Sultan Abdullah Al-Haj), குவாந்தான் நகராட்சியை ஒரு மாநகராட்சியாக அறிவித்தார்.[1]
பொது
மாநகராட்சி முதல்வரும்; மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற பகாங் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; குவாந்தான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].
நகர்ப்புற வளர்ச்சி
குவாந்தானின் புதிய வளர்ச்சித் திட்டங்கள்:
குவாந்தான் 188(The Kuantan 188) - கிழக்கு கடற்கரையில் 188 மீ. உயரத்தில் உள்ள மிக உயரமான கண்காணிப்பு கோபுரம்;
மாநில நிர்வாக மையத்தை பண்டார் இந்திரா மக்கோத்தா(Bandar Indera Mahkota) (Kota SAS) புதுநகருக்கு மாற்றுதல்.
குவாந்தான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தல்;
மலேசியா-சீனா குவாந்தான் தொழில் பூங்கா (Malaysia-China Kuantan Industrial Park); மற்றும் குவாந்தான் இயற்கைப் பூங்கா உருவாக்கம் (Kuantan Integrated Biopark);[3]
கோலாலம்பூர் - குவாந்தான் கிழக்கு கடற்கரை தொடருந்து இணைப்புத் திட்டம் (East Coast Rail Link - ECRL);[4]